முள்ளுக்கு நன்றி சொல்

வாழ்க்கையில் இளைஞர்கள்தான் சந்தோஷம் எங்கே இருக்கிறது என்று அலைகிறார்கள் என்றால் இன்னும் சில முதியவர்களுக்கும் சந்தோஷம் எங்கே இருக்கிறது என்று விடை தெரியாமல் இருக்கிறார்கள். "இன்பமும் துன்பமும் பிறர்தர வாரா " என்ற முதுமொழிக்கிணங்க எல்லாமே நம்முள் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்தால் என்றென்றும் சந்தோஷம்தான். உங்களது சந்தோஷம் உங்களை ஒருவர் நோக்கும் போது அவரைத் தொற்றிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நோக்கு வர்மக்கலை கையகப் படுமா என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.  நோக்கு வர்மத்தால் நீங்கள் அடுத்தவருக்கு  வன்மத்தை கொடுக்காதீர்கள், ஆனால் சந்தோஷத்தை கொடுக்கலாம். நீங்கள்  சந்தோஷமாக இருக்கிறீர்களோ இல்லையோ அடுத்தவரை சந்தோஷப் படுத்துங்கள். அவரது சந்தோஷம் உங்களை தொற்றிக் கொள்ளவில்லை என்றால் முதலில் உங்களிடம் கோளாறு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

அடுத்தவரை சிரித்த முகத்துடன் பாருங்கள். நன்பர்களுக்கு அடிக்கடி ஜோக் சொல்லுங்கள். அல்லது ஜோக் சொல்லச் சொல்லி கேளுங்கள்.( ஜோக் மாற்றிக் கொள்ளுங்கள் ) ஆரம்பத்தில் கொஞ்சம் அதிகப் பிரசங்கியாக நீங்கள் தோன்றினாலும், பின்னர் உங்களை கலகலப்பானவர் என்று சொல்வார்கள். இதைப் பற்றிய ஒரு ஆங்கில வாசகம் அடிக்கடி எனக்கு நினைவுக்கு வரும் ” When you share sorrow, it divides; when you share happiness, it multiplies”. பாருங்கள் நட்பானது, வருத்தம், சந்தோஷம் ஆகியவற்றை எப்படி மாற்றிவிடுகிறது என்று அதனால்தான் முக நூலிலும் share, share என்கிறார்கள். அனுபவங்கள், சந்தோஷம், துக்கம் ஆகிய எல்லாவற்றையும் (share) பகிர்ந்து கொள்ளுங்கள். அவைகள் மானுடம் (உங்களது வாரிசுகளையும் சேர்த்துதான்) தழைக்க உதவும்

இதையே தமிழிலும் சிறப்பாக சொல்லாம் ”பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி பெருகும், வருத்தம் குறையும்” இதைப் புரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள் தெரியாதவர்கள் வாழ்க்கையில் உழல்கிறார்கள். நான்தான் உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் என்று அடிக்கடி கூறிக் கொள்ளு(வேன்)ங்கள்.

விஷயத்திற்கு வருவோம் எனது நன்பர்களை சந்தித்தால் அதிலும் குறிப்பாக மாப்ஸ்களை சந்தித்தால் குஷியாகி விடுவேன். ஏனென்றால் என்னைப் பார்த்தவுடன் ஜோக் சொல்வார்கள். அவர்கள் எதிர்பார்ப்பதும் ஜோக்தான். அதிலும் முதல் சந்திப்பில் அந்த மில்ட்ரிகாரன் ஜோக்கை வைத்து அசத்தி விடுவேன். மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் முதலில் ஈகோவை கழற்றி வைத்துவிட வேண்டும். சினிமாவில் நகைச்சுவை காட்சிகளை ரசிக்கிறோம்..(அதை ரூம் போட்டு ஆழமாக யோசித்தால்,ஒன்று புரியும் தயவு செய்து அப்படி யெல்லாம் செய்யாதீர்கள் பின்னர் வாழ்க்கையில் நகைச்சுவையை இழந்து விடுவீர்கள். காமெடியெல்லாம் பார்த்தோமா ரசித்தமோ என்று போய்விடுனும் அதைப் போட்டு நோன்டிக்கிட்டு இருந்தால் சீரியஸா ஆகிவிடுவோம். ஆகவே லைட்டா எடுத்துக் கொள்ளவும்.) அந்த நகைச்சுவை காட்சிகளுக்கு பின்னே ஒருவரின் துயரம் இருக்கும். வாழைப் பழத்தோல் வழுக்கி ஒருவர் விழுந்தால் அதைப் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது.

 டாம் அண்ட் ஜெர்ரி பார்க்கும் போது சிரிக்காதவர்கள் மனிதர்களே இல்லை எனலாம். அதில் டாம் அல்லது ஜெர்ரி ஆகிய இருவரில் யாராவது ஒருவரின் துன்பம்தான் நமக்கு வேடிக்கையாகத் தெரிகிறது. கவுண்டமணி செந்தில் ஜோடியில் செந்தில் உதை வாங்குவதும், வசவு வாங்குவதும் கவுண்டமணியை கடுப்பேற்றுவதும் மற்றவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கிறது. வடிவேலுக்கு ஜோடி தேவையில்லை. தானாகவே தரம் தாழ்த்திக் கொண்டு அடிவாங்குவது, கேவலப்படுவது அதாவது ஈகோவை கழட்டி தூர எறிந்து விடுவது தான் வடிவேலுவின் டெக்னிக். ஆக ஈகோவை இழப்பவனால் தான் நகைச்சுவையை அளிக்கமுடியும் அல்லது ரசிக்கமுடியும் என்பதுதான் அடிப்படை. சீரியஸானவர்களுக்கு இந்த மாதிரியான இன்பம் கிடையாது.
ஈகோவை எவ்வளவு தூரம் இழக்கலாம் என்பதிலும் கவனமாக இருங்கள் இல்லாவிட்டால் புன்னகை மன்னர் பட்டம் கட்டிவிடுவார்கள். அதுவும் மிஞ்சினால் மானங்கெட்டவன் ஆக்கி விடுவார்கள். சிறுத்தை படத்தில் சந்தானமும் கார்த்திக்கும் காமெடி என்ற பெயரில் மானங் கெட்டதனமாக பேசுவதும் செய்வதும் அருவறுப்பைதான் ஏற்படுத்துகிறது. அதிலும் சந்தானத்தின் தங்கை ஒடிப் போனது அல்லாமல் தாயும் ஓடிப் போனதாக கார்த்தி சொல்லும் போது அதை ஏற்றுக் கொள்வது அந்த ஜோக் எழுதியவர்க்கு வேண்டுமென்றால் காமெடியாக இருக்கலாம்.நமக்கு செமகடியாகவும் அருவெறுப்பாகவும் இருக்கிறது.

அடுத்தவரை கேலி செய்வதும் சிரிப்பை வரவழைக்கும் அதில் முக்கியமானது  மிமிக்கிரி. நீங்கள் மிமிக்கிரியில் வல்லவராயின் நீங்கள் ஒரு நல்ல காமெடியன்தான். அதைத்தான் விவேக் செய்கிறார். வடிவேலுவை இமிடேட் செய்து கூட காமெடி பன்னுகிறார்.
நம்மை வைத்து யாராவது காமெடி பன்னினால் ஒரு அளவுக்கு தாங்கிக் கொள்ளலாம் அதிலும் நீங்கள் (Quick witted) விவேகமானவராக  இருந்தால் பதிலுக்கு பதிலாக, உடனுக்குடன் காமெடியாகவே அடிக்கலாம். அதற்கெல்லாம் பழக வேண்டும். அதற்குத்தான் மாமன், மச்சினன்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள். இப்பொழுதல்லாம் ஈகோ பார்க்கிறார்கள் அதனால்  கடுப்பபாகுகிறார்கள், நகைச்சுவை உணர்வு குறைகிறது.
 

சந்தோஷம் பலவிதங்களில் இருக்கிறது. நினைத்தது நடக்கும் போது, வெற்றி பெறும் போது, நமக்கு மிகவும் நெருங்கியவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் போது, நமது எதிரிகளுக்கு துன்பம் ஏற்படும் போது என்று பலவகைகளில் ஏற்படுகிறது. வாழ்க்கையின் தத்துவம் புரிந்து விட்டால் துன்பமே இல்லை என்று கூறமுடியாது, ஆனால் துன்பத்தைக் குறைக்கலாம், இன்பத்தைக் கூட்டலாம்.

சந்தோஷமான தருணங்களில் நீங்கள் பாடவேண்டும், ஆடவேண்டும். குறைந்த பட்சம் மனதுக்குள்ளாவ்து வார்த்தைகளற்ற  ஊ......லலல்லா போன்ற மெட்டுக்களையாவது பாடுங்கள். சந்தோஷமான தருணங்களில் உங்களை யாராவது பாட்டு பாடச் சொன்னால் நீங்கள் பாடுவதற்கு ஏதாவது ஒரு பாடல் கைவசம் வைத்திருக்கிறீர்களா?. ஒரு வேளை அப்படி ஏதும் பாடல் இல்லை என்றால் இந்த விஷயங்கள் அனைத்தையும் கலந்து பா.விஜய் ஒரு பாடல் இயற்றியுள்ளார்.  விஜய் அர்த்தமுள்ளதாக, அருமையான வார்த்தை பிரயோகத்துடன் இயற்றியுள்ளார். அதை SPB தனது இனிமையான குரலில் பாடியுள்ளார். அந்தப் பாடலில் இன்பத்திற்கான எல்லா விளக்கங்களும் உள்ளது. இந்தப் பாடலை மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். (ஆண்குரலில் உள்ளதால் ஆண்களுக்கு மட்டும். பெண்களுக்கு வேறு பாடல் உள்ளது அதை அடுத்தபதிவில் சொல்கிறேன்.) பாடி சந்தோஷப் படுத்துங்கள் இதை ஒரு அட்வைஸாகப் நினைத்துப் பாடலாம். ஏனென்றால் அட்வைஸ் வழங்குவதுதான் உலகத்தில் எல்லாருக்கும் எளிதான விஷயமாயிற்றே.

சந்தோஷமானவர்களுக்கு, உடல் இளைக்க காலையில் 5 கிலோமீட்டர் ஒடிவிட்டு வந்து ஒரே ஒரு இட்லியை காலை டிபனாக எடுத்தாலும் உடல் இளைக்காது. ஆனால் அதே மனிதர் மீளாத துயரத்தில் ஆழ்ந்துவிட்டால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் இளைத்து கருத்துப் போய் விடுவார்கள்.இதிலிருந்து தெரிவது என்னவென்றால் சந்தோஷமாக இருந்தால் சக்தி அதிகமாக நம்மிடம் உள்ளது. மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை. முதல் பாடமாக மனதை சந்தோஷமாக வைத்திருப்போம்.




சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
விளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான்
நாகரிகம் பிறந்ததடி
தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சி இல்லை
பாடம்படி பவளக் கொடி
உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டியில்லை
உள்ளம் என்பது பூந்தொட்டியானால் நாளை துன்பமில்லை
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே
அவன் ஆசையை போலவே
இந்த பூமி அமையவில்லையே
ஆண்டவன் ஆசையே
இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மை என்றும் தீமை எனும் நாலு பேர்கள் சொல்லுவது
நம்முடைய பிழை இல்லையே
துன்பமென்ற சிற்பிக்குள்தான் இன்பமென்று முத்து வரும்
துன்பத்தின் பயம் இல்லையே
கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்
காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு.



எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு. என்ற கடைசி வரி நமது துன்பத்தை குறைக்கும். இதை விட ”நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்றொரு ஆற்றுபடுத்தும் விதம் இருக்கிறது அது பற்றி அடுத்த பதிவில் பார்ப் போம்.

மேலும் படிக்க...!
top