கமலஹாசனும் அந்தாதியும்

அந்தாதி என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல், முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி, ஆகிய இரு சமஸ்கிருதச் சொற்களின் சேர்க்கையால் உருவானது. அந்தாதியிலும் அந்தாதி இருப்பதைப் பார்க்கலாம். அதாவது அந்தம் ஆரம்பத்திலும் ஆதி முடிவிலும் இருக்கிறது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல், சொல் அல்லது அடி, அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது அந்தாதித் தொடை எனப்படும். அந்தாதி அமைப்பு, பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கும், தொடர்பு மாறாமல் பாடுவதற்கும் வசதியாக உள்ளது. ஒரு பாடலின் ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் துவக்கச் சொல்லாக‌ (ஆதி) அமையும் இலக்கண முறை அந்தாதி ஆகும்




சில வகை அந்தாதிகள்

ஒலியந்தாதி
பதிற்றந்தாதி
நூற்றந்தாதி
கலியந்தாதி
கலித்துறை அந்தாதி
வெண்பா அந்தாதி
யமக அந்தாதி
சிலேடை அந்தாதி
திரிபு அந்தாதி
நீரோட்ட யமக அந்தாதி

அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.

உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே[2]

மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன.

முதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி
இரண்டாம் மூன்றாம் அடிகள் - சீரந்தாதி
மூன்றாம் நான்காம் அடிகள் - சீரந்தாதி
நான்காம் ஐந்தாம் அடிகள் - அடியந்தாதி
ஐந்தாம் ஆறாம் அடிகள் - சீரந்தாதி
ஆறாம் ஏழாம் அடிகள் - எழுத்தந்தாதி
ஏழாம் எட்டாம் அடிகள் - எழுத்தந்தாதி
எட்டாம் முதலாம் அடிகள் - சீரந்தாதி

பக்திப் பாடல்களில் அபிராமி அந்தாதி பிரபலமானது. அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. 

மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. அங்கு கோவிலில் (சுப்ரமணி அய்யர்) அபிராமியின் பட்டராக இருந்தார். அக்காலத்தில் பஞ்சாங்கம் தெரிந்தவர்தான் பட்டராக இருக்க முடியும். இவருக்கு அபிராமியின் மீது தீராத பக்தி, அப்பக்தியினால் சிலசமயம் பித்தனாகக் காட்சி அளிப்பார். அதைப் பயன்படுத்தி அவரை ஒழித்துக் கட்ட நினைத்தனர் அவரது சக பட்டர்கள். அப்பகுதியை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி ஒரு நாள் அக்கோவிலுக்கு சிவனை தரிசிக்க வந்தார். மன்னரிடம், இவர் ஒரு திமிர் பிடித்தவர் வேண்டுமென்றால் சோதித்துப் பாருங்கள் என்றனர் சக பட்டர்கள். மன்னரும் அன்று அமாவாசை என்பதை அறிந்திருந்தும், அன்னையை மெய்யுருகி வணங்கிக் கொண்டிருக்கும் பட்டரிடம் இன்று என்ன திதி என்று கேட்க அவர் அன்னையின் முகத்தைப் பார்த்து கொண்டே பௌணர்மி என்று கூறினார். மன்னர் மீண்டும் கேட்டார். மீண்டும் அதே பதில். இதைக் கேட்ட மன்னர் கோபமுற்று இன்று இரவு முழு நிலவு வரவில்லை என்றால் இவரை அக்னிக் குண்டத்தில் இறக்கி விடுங்கள் என்றார். மாலை அக்னிகுண்டம் ரெடியானது அவரைச் சங்கிலியால் கட்டி இறக்கத் தயாரானார்கள் . அப்பொழுதும் அன்னையை நினைத்து அந்தாதி வகையில் பாட ஆரம்பித்தார். அவர் 79 வது பாடல் பாடும் பொழுது அன்னை அபிராமி, தனது வைரக் காதணியை கழற்றி எறிய அது வானில் முழு நிலவு போல் ஜொலித்ததாம். அதன் பின் அபிராமி, பட்டருக்குக் காட்சியளித்து 100 பாடல்களையும் பாடச் சொன்னாராம். அதுதான் பின்னாளில் அபிராமி அந்தாதி எனப் புகழ் பெற்றது. மாதிரிக்கு இங்கு 23,24,25 பாடல்களை கொடுத்துள்ளேன் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டந்தன்னை
உள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளதே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண் மணியே. 23

மணியேமணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அனுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே. 24

பின்னே  திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே. 25

சரி திரைப்படத் துறையில் பயன் படுத்திய விதம் பார்ப்போம்

பாலச்சந்தர் இயக்கிய மூண்று முடிச்சு என்ற படத்தில், கமலஹாசன், ஸ்ரீ தேவி,ரஜினிகாந்த் ஆகியோருக்காக ஒரு பாடல் காட்சி அமைத்திருப்பார். அதில் காட்சி அமைப்பும்,அதனுடன் பாடல் அமைந்த விதமும் என்னை மிகவும் கவர்ந்தது. பாடல் என்னவோ சோகத்தில் முடிந்தாலும், தமிழின் யாப்பிலக்கண விதிகளில் ஒன்றான அந்தாதி வகையில் அந்த பாடல் அமைந்துள்ளதுதான் அந்தப் பாடலின் விசேஷம். மேலும் அதை ஒரு போட்டிப் பாடல் வகையில் கண்ணதாசன் அமைத்திருப்பார். சீரந்தாதியின் விதிப்படி கமலஹாசன் ஆரம்பிக்க அவர் முடிக்கும் வார்த்தையில் ஸ்ரீதேவி ஆரம்பிக்க வேண்டும். அதுபோல் ஸ்ரீதேவி முடிக்கும் வார்த்தையின் ஆரம்பத்தில் மீண்டும் பாடல் ஆரம்பிக்க வேண்டும். இதுதான் போட்டியின் விதி பாலச்சந்தரைத் தவிர யாருக்கும் இந்த மாதிரி சிந்தனை வரவே வராது.

பாடல் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கும். ஸ்ரீதேவி "மணவினைகள்" என்று முடித்துவிட்டு கமலஹாசனை ஊம், அடுத்துப் பாடுங்கள் என்ற பொழுது ஹீரோவுக்கு பாடல் வராது. சிரித்து மழுப்பி வார்த்தைகளை தேடும் பொழுது, தவறி ஆற்றில் விழுந்து விடுகிறார்.


இதை மாத்தி யோசிக்கும் பொழுது வேறுவிதமாகத் தோன்றுகிறது. இதே போன்ற ஒரு காட்சியில் வறுமையின் நிறம் சிவப்பு என்ற படத்தில் ஒருமுறைக்கு இருமுறை ராகத்தைக் கேட்டு பின்னர் சமாளித்து பாட்டைப் பாடி விடுவார்.


ஆனால் இங்கே பாடலை முடிக்க முடியாமல் சமாளித்தும், முடியாததால், "ஆஹா தமிழில் நாம் தவறி விட்டோமோ என்று தற்கொலை செய்து கொண்டாரோ எனக் கூட எண்ணத் தோன்றுகிறது. ஆனால் இத்துடன் கிளைமாக்ஸ் முடிந்து விடவில்லை.

காதலனைக் காப்பாற்றும் படி வில்லனைக் கேட்டால், அவன் எப்படி காப்பாற்றுவான்?. ஆனால் வில்லன் என்றாலும் சாதாரண வில்லனல்ல (யந்திரனை நினைவு படுத்துகிறார்) ஹீரோவால் முடிக்க முடியாத வரிகளை வில்லன் அதே போட்டிப் பாடல் விதியை பின் பற்றி பாடலை முடிப்பதுதான் கிளைமாக்ஸ்.

நீங்கள் பாடலை (MP3 ல்) மட்டும் கேட்டால் வில்லனின் கடைசி வரிகள் இருக்காது என்று நினைக்கிறேன். படத்தோடு பார்த்தால்தான் வில்லனின் புலமையும் தெரியும். பாடலைப் படித்துப் பாருங்கள். இப்பாடல் இசை நயத்திற்காக ஒவ்வொரு வரிகள் இரண்டு தடவை பாடப் படுவதை பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆண்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
பெண்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்கணைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்
ஆண்
மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடி இரண்டும் பஞ்சனைகள்
மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடி இரண்டும் பஞ்சனைகள்
பஞ்சனையில் பள்ளிக் கொண்டால் மனம் இரண்டும் தலையணைகள்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
பெண்
தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்
தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்
ஊம் ம்ம்ம் ஊம்ம்ம் ...........பூமாலை மணவினைகள்
ஆண் .............................
ஆண் (வில்லன்)
மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
விதிவகையை முடிவு செய்யும் வசந்த கால நீரலைகள்

அதன் பின்னரும் படத்தைப் பார்த்ததால் சில எண்ணங்கள் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. கதையின் நாயகி அந்த வில்லனை மன்னித்து மகனாக ஏற்றுக் கொள்கிறாள். சிலர் சொல்வார்கள் அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக அவனின் தந்தையை மணந்து கொண்டாள் என்று. எனக்கென்னவோ அவள் இவ்வாறு நினைத்திருக்கலாம். காமத்தினால் நண்பனின் மரணத்தை வேடிக்கை பார்க்கும் வில்லனாக இருந்தாலும் கவிதையை முடிக்கும் புத்திசாலித் தனம் இருப்பதால் மகனாக ஏற்றுக் கொண்டாளோ எனத் தோன்றுகிறது. ஏனென்றால் கவிதை இருக்கும் இடத்தில் கண்டிப்பாக நல்ல குணங்கள் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் புத்திசாலித் தனத்துக்கு கேரண்டியாவது இருக்கும்.

ஆகவே மக்களே உங்கள் உணர்ச்சிகளின் பெருக்கை கவிதையாய் செய்யுங்கள். சிலருக்கு கவிதை தானாக வந்து விடும். ஆனால் கவிதை வரவில்லை என்று தெரிந்த பின்பும் எழுதி  மற்றவர் கழுத்தை அறுக்காதீர்கள். கவிதை மோசமானால் உங்களது கெட்ட குணங்களோடு, அறிவீனமும் தெரிந்து விடும்.

முடிந்தால் இதையும் படித்து விடுங்கள்  .
பழனி.



மேலும் படிக்க...!
top