முதலில் மின்வெட்டு பற்றிய சில தகவல்களை அறிவோம். பின்னர் யுபிஎஸ்(UPS) பற்றி ஆராய்வோம்.

தமிழக மின் வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் தற்போதைய தேவை 11500 மெ.வாட், ஆனால் உற்பத்தியோ 7500 மெ.வாட் ஆகவே 4,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. 


அடுத்த ஐந்தாண்டுகளில், தற்போதுள்ள, 11,500 மெகாவாட்டிலிருந்து, 18 ,311 மெகாவாட் வரை மின்சாரத் தேவை உயரும். ஐந்தாண்டுகளில், தமிழகத்தில் மின்சார உற்பத்தியின் அளவு, 20,152 மெ.வாட் ஆக உயரும் என, தமிழக மின்வாரியம் கணக்கிட்டுள்ளதாம். என்னைக்கு அத்தைக்கு மீசை முளைச்சு சித்தப்பான்னு கூப்பிடறது.   இது வரை 53,000 கோடி கடன் ஏற்பட்டுள்ள நிலைமையிலும் கூட தமிழகத்தில் வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு சமமாக, இலவச மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும், 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச மின்சாரம் வழங்கப் பட்டுள்ளதாக, தமிழக மின்துறை தெரிவித்துள்ளது. (விளங்குமா தமிழ்நாடு)

தமிழகத்தில் 2.24 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதில், 19.72 லட்சம் விவசாய இணைப்புகளும், 14.45 லட்சம் குடிசை இணைப்புகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதில், ஆண்டுக்கு, விவசாய இணைப்பு ஒன்றிற்கு, 250 ரூபாயும், குடிசை இணைப்பிற்கு, 120 ரூபாயும், தமிழக அரசின் மானியமாகக் கிடைக்கிறது. இந்த இணைப்புகளுக்கு, மீட்டரும் கிடையாது; மின் கட்டணமும் கிடையாது.  அடப் பரதேசிகளா, ஆற்றில் போட்டாலும் அளந்து போடவேண்டாமா?

மின் பகிர்மான இழப்பில், 1,349.8 கோடி யூனிட் மின்சாரம் வீணாகியுள்ளது, இதனால் 7,167 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதை, அரசின் மனு வெளிப்படுத்தியுள்ளது. ( அடக்கண்றாவி! கழுதை பெறது கால்பணம் சுமைகூலி முக்காப் பணமா)

மின் கட்டணம் செலுத்தும் வீடுகளுக்கு, 1,634 கோடி யூனிட் மின்சாரம் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த ஆண்டில் வீடுகளுக்கு, 8,678 கோடி ரூபாய்க்கு வினியோகிக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப் பட்டுள்ளது. யூனிட்டுக்கு, 5.31 ரூபாய் செலவழிப்பதாக, தமிழக மின்துறை நிதி நிலை அறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டில்,6,478 கோடி ரூபாய்க்கு 1,220 கோடி யூனிட் மின்சாரம் விவசாயத்திற்கு,  இலவசமாக தரப்பட்டுள்ளது. அதாவது, பணம் கட்டும் நுகர்வோருக்கு வழங்கும் மின்சாரத்திற்கு இணையாக, இலவச மின்சாரம் தரப்படுகிறது. இதற்கு, அரசின் சார்பில், 219 கோடி ரூபாய் மட்டுமே மானியத் தொகையாகக் கிடைத்துள்ளதால், இலவச விவசாய மின்சாரம் மூலம், தமிழக மின் வாரியத்திற்கு, 6,259 கோடி ரூபாய் செலவு.

 மேலும் தகவல்களுக்கு http://www.dinamalar.com/News_Detail.asp?Id=346355

குடிசைகள் பயன்படுத்தும் மின்சாரம் எவ்வளவு என்பது, மின் வாரியத்திற்கே இன்னும் தெரியாது. அங்கு மீட்டர்கள் இல்லாததால், கணக்கிட முடிய வில்லை. எண்ணிச் செய்கிறவன் கெட்டி எண்ணாம செய்கிறவன் மட்டின்ன கதையா இவ்வளவு இன்சீனியர்களும் மட்டியா?. எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்.  விவசாய மின்சாரம் மட்டும் உயரழுத்த டிரான்ஸ்பார்மர்கள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது என, மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆக, 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கும் மின் வாரியம், இவ்வளவு தொகைக்கு இலவச மின்சாரம் வழங்கினால், வரும் காலங்களில் இலவச மின்சார நஷ்டத்தை சரி செய்ய முடியாத நிலை ஏற்படும். மின் வாரியத்தில் பணம் கட்டி மின்சாரம் பெறும் நுகர்வோர் மீது, கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.என்னத்த சொல்லி என்ன பண்றது.உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா? போடு வரியை. ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணிக்குன்ன கதையா இருக்கவே இருக்கானுக கேணைத் தமிழகமக்கள்.

 தனியாரின் கொள்ளை:

இந்த 53,000 கோடியில், தனியார் கொள்ளை 15,000 கோடியாவது தேறும்.

6500  கோடிஇலவச மின்சாரம் X 6வருடம்= 39000 கோடி + தனியார் கொள்ளை 15000 கோடி =54000 கோடி கடன்.

 எடுத்துக் காட்டாக நாகை மாவட்டம் சீர்காழி அருகிலுள்ள பிள்ளைப் பெருமாள் நல்லூரில் ஆந்திராவின் டாக்டர் சி.பிரதாப்ரெட்டி குழுமத்திற்கு மின் உற்பத்தி நிலையம் அமைத்துக் கொள்ள இசைவு வழங்கப்பட்டது. பிள்ளைப் பெருமாள் நல்லூர் மின் உற்பத்திக் குழுமம் என்ற பெயராலேயே பிரதாப் ரெட்டி குழுமத்தினர் அந்நிலையத்தை நிறுவினர். ரெட்டி லேப்ஸ், அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றின் முதலாளிதான் இந்த பிரதாப்ரெட்டி.

இந்த பிபிஎன் நிறுவனத் திடமிருந்து ஒரு யூனிட் 17 ரூபாய் 80 காசுக்கு மின்சாரம் வாங்குகிறது தமிழக அரசு. மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தி நிலையங்களில் 1 யூனிட் உற்பத்தி விலை 2 ரூபாய் 15 காசு என்பதை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் கொள்ளையின் அளவு புரியும். கடந்த ஆண்டு முழுவதும் இந்நிறுவனம் மின்சார வாரியத் திற்கு விற்றது 24.4 கோடி யூனிட் மின்சாரம். ஒப்பந்தபடி இந்த மின்சாரம் 35 நாள்கள் உற்பத்திக்குச் சமமானது. எஞ்சிய 330 நாள்களுக்கு இந்த நிலையம் உற்பத்தியே செய்ய வில்லை என்றாகிறது. ஆயினும் சும்மா இருந்த நாள்களுக்கு நிலைக் கட்டணமாக 330.04 கோடி ரூபாயைத் தட்டிச் சென்றது. இது போல் ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 1006 கோடி ரூபாயை உற்பத்தி இல்லாத காலங்களுக்கு நிலைக் கட்டணமாக மின்சார வாரியம் வழங்கி யுள்ளது. (எரியிற வீட்டில் பிடுங்கிறது ஆதாயமாம்).

 அடுத்த ஐந்தாண்டுகளின் பற்றாக்குறையை சமாளிக்க, தினமும் 4000 மெகாவாட் மின்சாரம், தனியாரிடம் கொள்முதல் செய்ய, டெண்டர் விடப்பட்டுள்ளதாம். (இன்னைக்கு இலை அறுக்கிறவன் நாளைக்கு குலை அறுக்கத்தான் செய்வான். கிழிந்தது தமிழகத்தின் பொருளாதாரம்).

 ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும், முடைக் காலத்தில் வெவ்வேறு மின் உற்பத்தி நிலையங்களிடம் அவ்வப்போது வாங்கிக் கொண் டதற்கும் மட்டும் கடந்த ஆண்டு 8884.4 கோடி ரூபாய் மின்வாரியம் வழங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாய் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டது. மேற்கண்ட ஐந்து நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை கட்டுப் படுத்தியிருந்தாலே இந்த இழப்பில் ஏறத்தாழ 8 ஆயிரம் கோடி ரூபாயைக் குறைத்திருக்க முடியும்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் , மின்சார தீர்ப்பாயமும் எவ்வாறு தனியார் நிறுவனங்களின் கொள்ளைக்குத் துணைபோய் மின்வாரியத்தை கடன் சேற்றில் சிக்க வைக்கின்றன என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டைப் பார்க்கலாம். (அவன்தம்பி அங்கதனுக்கு பங்கில்லாமலா போயிரும்) . கள்ளனும், தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம் அல்லவா.

 மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2010 ஆம் ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்திய போது பன்னாட்டு, வடநாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறு வனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1.80 முதல் ரூ.2.50 வரை கட்டணச் சலுகை வழங்கி அறிவித்தது. பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு ,அதை பிடுங்கித் திண்ணுச்சாம் அநுமாருன்னு கதையா கார்ப்பரேட் நிறுவனங்கள் இச்சலுகைகளால் கொழிக்கிறது.

இவ்வாறு கட்டணச்சலுகை வழங்குமாறு தமிழக அரசும் கோரவில்லை; அந்த நிறுவனங்களும் கோரவில்லை. மக்கள் கருத்தும் கோரப்படவில்லை. ஆற்றின் போக்கே அரசன் போக்கு என தானடித்த மூப்பாக தகவல் தொழில் நுட்பக் குழுமங்களுக்கு இக் கட்டணச் சலுகையை வாரி வழங்கியது ஆணையம். (தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்தான்). 

ஒழுங்குமுறை ஆணையம் தான் இவ்வாறு என்றால் மின்சாரக் கட்டணம் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரிக்கும் உச்ச அமைப்பான மின்சாரத் தீர்ப்பாயமும் அதற்கு மேல் இருக்கிறது. பிரதாப் ரெட்டியின் பிபிஎன் நிறுவனம் தனக்கு மின்சார வாரியத்திலிருந்து 189 கோடி ரூபாய் பணம் நிலுவையுள்ளது என வழக்குத் தொடர்ந்தது.அவ் வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், பிபிஎன் குழுமம் கேட்டதை விடப் பல மடங்கு அதிகமாக இழப்பீட்டை கணக்கிட்டு ரூ 1050 கோடி வழங்குமாறு மின்சார வாரியத்திற்கு ஆணையிட்டது. (ஆறு போவதே போக்கு, அரசன் சொல்வதே தீர்ப்பு.) குதிரை தள்ளி விட்டதுமில்லாமல் குழியும் பறிச்சுச்சாம்.

இது என்ன கொடுமை இதுக்கு மேல இருக்கு. வீடியோகான் நிறுவனத்துடன் தமிழக மின்சார வாரியம் ஒரு ஒப்பந்தம் போட்டு, ஏதோ காரணத்தால் ரத்து செய்து விட்டது. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுவுற மாதிரி அழு.து கேஸ்ஸ போடுன்னு பேசிக்கிட்டாய்ங்க போல. அவனும் இங்கேயெல்லாம் கேஸ்ஸப் போடாம சிங்கப்பூரில் சர்வதேச நீதி மன்றத்தில் நம்ம சிதம்பரம் மூலம் கேஸ்ஸப் போட்டு 3000 கோடி நஷ்ட ஈடு கேட்டானுக. அதுதான் அவனுக செய்த தப்பு பேசாம நம்ம ரெட்டி மாதிரி தீர்ப்பாயத்தில் போட்டிருந்தா ஒரு 6000 கோடியாவது கிடைச்சிருக்கும் .அங்க வெறும் 125 கோடிதான் கொடுக்கச் சொன்னாங்களாம். அதனால ரெட்டிவழியைப் பின் பற்றி வீடியோகானும் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கே வந்துட்டானுக. இவனுக தீர்ப்பாயத்திற்கு போனா 6000 கோடி கிடைக்கும் ஆனா ஏன் போகலைன்னு தெரியலை. எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்போ போங்க.

சிதம்பரம் ஒரு தமிழனாம். அன்னம் இட்ட வீட்டிலே கண்ணம் இடுறவனுக, உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ணுறவனுக வம்சம் விளங்குமா? இவனைத் தலையில் வைத்து ஆடுறானுக தமிழனுக.(இருக்கிறவன் ஒழுங்கா இருந்தா தானே சிரைக்கிறவன் செம்மையா சிரைப்பான்.)

இப்போதும் பிபிஎன் உள் ளிட்ட நான்கு தனியார் நிறு வனங்கள் மின்சாரம் வழங்கு வதை நிறுத்தி வைத்திருப்பதால் மின்வெட்டு இன்னும் கூடுதல் ஆகிறது. இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிஞ்ச கதையாவில்ல இருக்கு.

 மேலும் தகவல்களுக்கு

தொடரும்.....................
இரா. சந்திரசேகர்.
 பழனி. 

மேலும் படிக்க...!
top