சமஸ்கிருதம்   எப்படி உருவானது ?  (பாகம் 4)

தமிழனின் மர்ம நூல் எது என, சென்ற பதிவில் கேட்டிருந்தேன். அப்படி ஒரு நூல் இருப்பது பொதுவாக யாருக்கும் தெரியாது. அதன் தோற்றத்தைப்  பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். கல்ப ஆரம்பத்தில் பிரமதேவர், தேவர்களுக்குச் சொன்ன பிரமநூலை, இந்திரன் நூறாயிரம் கிரந்தங்களாகச் சுருக்கிக் கூறினான் என்றும் அதனை மாயன் என்னும் மகரிஷி  இன்னும் சுருக்கமாக மக்களுக்கு அருளினான் எனவும் கூறுவர். அதனால் இந்திரன்  மூலமாக பிரம்மன்  அருளியதை, மாயன் தமிழர்களுக்கு அருளியதாகவும் அதுதான் "ஐயிந்திறம்" எனப்படும் நூல் எனக் கூறுகிறார்கள்.

வேறொரு வரலாறும் உள்ளது. இந்நூலானது தொல்காப்பியரால் முதல் தமிழ்ச் சங்கத்தில் பாண்டிய வேந்தன் முன் அரங்கேற்றப் பட்டதால் வேந்தன் நூல் எனவும், வேந்தனை  இந்திரன் என்று கூறப்படுவது மரபு என்பதால் இந்திரன் நூல் என்பர். இந்திரனின் யானை ஐராவதம் என அழைக்கப் படுவது போல் இந்திரனின் நூல் "ஐயிந்திறம்" என்றழைக்கப் படுகிறது.

ஐயிந்திறத்தைப் பற்றி எந்த ஆராய்ச்சியாளராவது இதுவரைக்கும் சரியான விளக்கம் அளித்துள்ளனரா என்பது சந்தேகம்தான். அது வாஸ்து சாஸ்திரம் பற்றியது என்ற வகையில் சிலர் சம்பந்தம் இல்லாமல் விளக்கமளித் திருக்கிறார்கள். இன்னும் சிலரோ பொத்தாம் பொதுவாக அது தர்க்கம் மற்றும் பேச்சுக் கலை பற்றியது என்கிறார்கள். ஐந்திறம் குறித்தான செய்திகளும் அதன் தொல்காப்பியத் தொடர்புகளும் இன்றளவும் வாத எதிர் வாதங்களுக்குத் தான் இடமளித்துள்ளன.

பிற்காலத்தில் தோன்றிய வடமொழியில் உள்ள சில குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் ஐந்திறம் ஒரு வடமொழி இலக்கண நூல் என்று ஐயுருகின்றனர். ஆனால் தமிழில் தொல்காப்பியப் பாயிரம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் , திருக்குறள் போன்றவற்றில் உள்ள குறிப்புகள் மற்றும் வடமொழி நூற்களின் குறிப்புகள் மூலம் உறுதியாக இது தமிழில் இயற்றப்பட்டதற்கான தெளிவுகள் பெறலாம் அதில் தமிழ், மொழி என்று அடிக்கடி வருவதாலுமிது தமிழுக்கானதுதான். மேலும் ஐந்திறம் பற்றிய குறிப்பை வால்மீகியும், கம்பரும் மட்டுமில்லாமல் வட மொழிப் புலவர்களும் பயன் படுத்தியுள்ளனர்.

நான் ஏற்கனவே கூறியது போல் உலகில் எல்லோரும் பயன் படுத்தும் வகையில் பொதுத்தளமாக சமஸ்கிருதத்தையும், அந்த சமஸ்கிருதத்தை  உருவாக்கி அதில் தமிழ் மூலமாக  புலமை பெறுவதற்கான  வழிமுறையாக ஐயிந்திறத்தையும் தமிழன் உருவாக்கி இருக்க வேண்டும். ஏனெனில் ஐயிந்திறம் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டாலும் அதன் நுட்பமும் பயன்பாடும் இந்தியா முழுவதும் உள்ள பேரறிஞர்களால் அறியப்பட்டு உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒரு நூல், மற்ற மொழியினாராலும் எளிதாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்றால் அது ஒரு கருவியாக அதாவது ஒரு டூலாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் எல்லா மொழியினரும் அதைப் பயன் ப்டுத்தி உள்ளனர். சமஸ்கிருதம் இந்தியா முழுவதும் எளிதாக வழக்கத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டதும் அதானால்தான். இந்நூல் கொண்டு  தொகுத்து வைக்கப் பட்ட நூல்களுள் பன்னாட்டுப் பேரறிஞர்களின் கருத்துக்களும் கலை நுணுக்கங்களும் கொண்ட ,காலந்தொறும் புதுமைப் படுத்தப் பட்ட தொகுதிகள் கொண்ட  களஞ்சியமாக சமஸ்கிருதம் கருதப் பட்டது,

அக்காலத்தின் விக்கிபீடியாவாக போற்றப்பட்டிருக்க வேண்டும்.. அதற்கான மொழியாக சமஸ்கிருதத்தை உருவாக்கியிருக்க வேண்டும். அந்த மொழிக்கான அல்காரிதம் தான் ஐயிந்திறத்தில் மறைத்து வைக்கப் பட்டிருக்க வேண்டும்.  பன்மொழியாளர்க்கும் பயன்படல் வேண்டி தமிழிலுள்ள எல்லா படைப்புகளும் இதிகாசங்கள் உடபட சமஸ்கிருதத்திற்கு  மாற்றப்பட்டன. அவ்வாறு மாற்றப் படுவதற்கு தமிழகத்தில் அமைந்த பேரறிஞர் கூட்டத்தைச் ‘சங்கம்’ என்றும், வேந்தனூலை ‘இந்திரனூல்’ என்னும் பொருளில் ஐந்திறம் என்றும்  வழங்கலாயினர்.

இன்றைய வடமொழியறிஞர்களும் ஆய்வாளர்களும் பாணினி முதலானோருக்கு முன் ஐந்திரமென்னும் வியாகரண நூல்  இருந்ததாகவும் அது பற்றிச் சிற்சில குறிப்புக்கள் கிடைப்பனவாகவும் கூறிப் பாணினிக்குப் பின் அந்நூல் வழக்கொழிந்திருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். இவ் ஐந்திரநூலைப் பாணினி எண்ணாயிரங் கிரந்தங்களில் அடக்கினான் என ஹொய்-லி (Hoei-Li) என்னும் சீன அறிஞர் கூறியுள்ளார்.

இனி தைத்திரீய ஆரண்யகத்தில் காணப்படும் ஒலிநூற் குறிப்புக்கள் சிலவும், சாந்தோக்கிய உபநிடதத்தில் வரும் குறியீடுகள் சிலவும், ஐதரேயப் பிராமணத்தில் உள்ளன சிலவும், ஐந்திற வழக்குகளே எனவும், வேதகற்ப சூத்திரங்களிலும் இவ்வழக்குகள் வந்துள்ளன எனவும், தைத்திரீயப் பிராதிசாக்கியம், காத்தியாயனப் பிராதி சாக்கியம், பாணினீயம், பதஞ்சலி மாபாடியம் என்பன ஐந்திர இலக்கண மரபினை எடுத்தாண்ட நூல்கள் எனவும், இக்குறிப்புக்களால் ஐந்திரமென்னும் பெயருடையதோர் இலக்கணத் தொகுதி இருந்தமை உறுதியாதல் புலனாகும் எனவும் ‘டாக்டர் பர்னல்’ என்னும் பேரறிஞர் ஆராய்ந்து விளக்கியுள்ளார்.

மொழி ஆராய்ச்சியாளர் ஏ சி பர்னல் ஐயிந்திறம் பற்றி குறிப்பிடும் எடுத்துக்காட்டுகளுள் தலையாயவை இரண்டு. ஒன்று பெளத்த இலக்கியமாகிய 'அவதான சாதகத்தில்' புத்தரின் தலைமாணாக்கருள் ஒருவராகிய சாரிபுத்தன் தமிழ்நாட்டில் தன் பிள்ளைப் பருவத்தில் 'அய்ந்திறம் கற்றான்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகும். இதனை விளக்கும் சக்கரவர்த்தி நயினார், 'அய்ந்திறம்' என்பதற்கு உலகாய்தம் எனப் பொருளுரைத்தார்
இதனை விளக்கும் வகையில் அறிஞர் பர்னல் தரும் மற்றொரு சான்று பாணினி பற்றியதாகும். காஷ்மீரைச் சார்ந்த சோமதேவா என்பவர் எழுதிய கதாசரிதசாகரம் எனும் நூலிலிருந்து தரும் எடுத்துக்காட்டு அதுவாகும்.

கதாசரிதசாகரம் எனும் நூலிலில் 'சமஸ்கிருத இலக்கண ஆசிரியராகிய பாணினி ஒரு காலத்தில் அறிவிலியாக இருந்தார் என்றும், அதனால் வரரு சிகாத்தியாயனார் நடத்திய குருகுலத்திலிருந்து விலக்கப்பட்டார் என்றும், அப்படி விலக்கப்பட்ட பாணினி சிவனை நோக்கித் தவம் இருந்தார் என்றும், சிவன் அருளைப் பெற்றபின் மீண்டும் குருகுலத்திற்கு வந்து அவர்களோடு வாதம் புரிந்தார் என்றும் ஏழுநாட்கள் நடந்த அந்த வாதத்தில் பாணினி தோற்றார் என்றும் தன் அருள்பெற்ற பாணினி தோற்றதனால் ஆத்திரமுற்ற சிவன் குருகுலம் பின்பற்றிய ஐயிந்திர நூல்களை எல்லாம் அழித்தான்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.சமஸ்கிருதப் புலமைக்கு ஐயிந்திறம் மிகவும் அவ்சியமான நூல் என்பது இதனால் அறிய வருகிறது.

ஏசி பர்னால் அயிந்திறம் பற்றி நிறைய கூறியிருந்தாலும் அஃது என்னென்ன பொருள்பற்றி ஆராய்ந்து அமைக்கப் பெற்றதென மொழி ஆய்வாளர் பர்னல் விளக்கவில்லை. அவரால் விளக்க முடியவில்லை என்பதன் காரணம் அதை ஒரு  இலக்கண நூல் என்ற கற்பிதத்தில் கடைசி வரை ஆராய்ந்ததால்தான். அவரது ஆராய்ச்சியின் முடிவுகளால் ஐயிந்திறம் என்பது ஒரு சமஸ்கிருத மொழி மாற்றத்திற்கான ஒருவகை இலக்கணம் தான் என்பதை அறியலாம்.. அது ஒரு மொழி மாற்றத்திற்கான மென்பொருள் கொண்டது என்ற உண்மை அறியாமல் ஆராயும் போது ஏதும் விளங்காதது இயல்புதானே.

ஆனாலும் இதில் சில குழுவினர் ஐயிந்திறத்தை அழிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தன என்பது தெரிகிறது. ஏற்கனவே சிலப்பதிகார கூற்றின் படி நான்மறையாளர்கள் எனப்படும் அந்தணர்கள்  ஐயிந்திற நூலை அழகர்மலையில் உள்ள பாறைப் பிளவில் மறைத்து வைக்கப் பட்டதாகவும் அறிகிறோம். நான்மறையாளர்கள் ஒரு வேளை உண்மையிலே மறைத்து வைத்து விட்டனரா. இவ்வாறு ஐயிந்திறம் நூலின் பரவல் அறிஞர்களின் அறிவு சார்ந்த எல்லை மீறி பாமரனுக்கும் கிட்டும் வகை ஏற்பட்டதால், அதன் எல்லையை குறுக்குவதற்காகவும், அதற்கு ஒரு தெய்வீகத்தன்மையை ஏற்படுத்தவும் , ஐயிந்திறத்தை அழிப்பதற்கும் ஒரு பிரிவு தயாராகிவிட்டனர் போலும்.

உதாரணத்திற்கு ஐயிந்திறம் நூல் எதற்காக இயற்றப் பட்டது என்று ஐயிந்திறத்தில் 42 வது பாடலில் கூறப்பட்டுள்ளது. அப்பாடலின் பொருளைக் காண்போம்
மொழிமுதல் ஒலி ஓம் முறையின் உணர்த்தி
விழுமிய பொருளை விளக்கிச் செறித்தே
செழுந்தமிழ் மூலம் ஐந்தியல் கோலம்
முழுமை விளக்கும் ஐந்திற நூலே (42)

"மொழிமுதல் ஒலி ஓம் முறையின்" இந்த வரியின் அர்த்தம் கொண்டு பார்க்கும் போது ஒலி ஓம் முறை என்பது சமஸ்கிருதம் தவிர வேறெதுமாக இருக்க வாய்ப்பே இல்லை. மேலும் "செழுந்தமிழ் மூலம் ஐந்தியல் கோலம்" என்பது "தமிழைக் கொண்டு உருவாக்கப் படும் படைப்பு" என்பது தெளிவு
இதனை தமிழறிஞர்களும், கணித வல்லுனர்களும், மொழி ஆராய்ச்சியாளர்களும் கலந்து ஆய்வு செய்தால் அதன் உண்மைத் தன்மையை கண்டறியலாம்.

நான் மேலோட்டமாக படித்தவரை  எனது அறிவுக்கு எட்டியவரை அது அனேகமாக தமிழை சமஸ்கிருதமாக மாற்றுவதற்கான கோடிங் ஆகத்தான் இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஏனெனில் அதில் உள்ள வார்த்தைகளில் 30 சதவீதம் பெரும் பாலும், "தமிழ், மொழி, குறில் நெடில், ஒலி,ஓசை, ஓம், இலக்கணம், எழுத்து, தமிழ், எட்டு, எட்டெட்டு, ஐந்து, எண்ணெண், இலக்கணம் , எண்கள்" பற்றிய வார்த்தைகள்தான் அதிகமாக உள்ளது  எனத் தெளிவாகத் தெரிகிறது. ஐந்திறத்தில் ஆங்காங்கே தமிழின் எழுத்துக்கள் பற்றியும், குறில், நெடில் போன்ற விளக்கங்களும், கணிதக் குறியீடுகள் எட்டின் அடுக்குகள், அறுபத்திநான்கு, மற்றும் ஐந்து என்று வருகிறது. தமிழ்மொழியை சமஸ்கிருதமாக மாற்றுவதற்கு, எட்டை அடிப்படையாக கொண்ட ஒருவிதமான வாய்ப்பாடு பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது.

உதாரணத்துக்கு ஒரு பாடல்.

எண்எண் கலையால் இலங்குறும் மொழியாய்ப்
பண்ஒலி ஓசைப் பெரு நிலை ஓங்கிக்
குறி நிலை மாறாக் குறிப்புறும் கலைதிகழ்
அறிவியல் விளக்கும் அருந்தமிழ் மொழியே (107)

"எண்எண் கலையால் இலங்குறும் மொழியாய்" என்பதைஇவ்வாறு "எண்களின் கலையால் உருவாக்கப் பட்ட மொழியாய்" என அர்த்தம் கொள்ளமுடிகிறது. ஐயிந்திறத்தின் ஒவ்வொரு பாடலிலும் தமிழ்,மொழி ஓசை, ஒலி,ஓம் என்ற வார்த்தைகள் வருவதால் அது தமிழை பேசுவதற்கோ அல்லது பாடுவதற்கோ மட்டுமான மற்றொரு மொழியாக மாற்றுவதற்கான இலக்கணத்தைப் பற்றியதாகும் எனச் சந்தேகம் எழுகிறது. அதை யாரெல்லாம் படிக்கலாம் என்பதை முதலில் வரையறுத்து விடுகிறார்கள். ஆயகலை அறுபத்தி நான்கினும், தமிழ் மொழியிலும் தேர்ந்தவர்கள் மட்டும் படிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆகவே தமிழும், மற்ற பிராந்திய மொழியில் ஏதாவதொரு மொழி கற்றவரும் ஐயிந்திறத்தின் துணை கொண்டு தங்கள் படைப்புகளை சமஸ்கிருதத்திற்கு மாற்றலாம் அல்லது சமஸ்கிருதத்தில் உள்ள படைப்புகளை தங்கள் மொழிக்கு மாற்றலாம்.

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=1527

கி.மு. எட்டாம் நூற்றாண்டில் பிராமணங்கள், ஆரண்யங்கள், தர்மசாத்திரங்கள் முதலான வைதிக இலக்கியங்கள் ஐயிந்திறத்தின் உதவியால் சமஸ்கிருதத்தில் தோன்றின. இவை உருவாக்கிய சமூகக் கோட்பாடுகளுக்கு மறுப்பாக எதிராக  ஓர் அறிவுப் புரட்சியும் தோன்றியது. அப்புரட்சியைப் பரிவிராசகர் அமைப்பு நாடுமுழுவதும் கொண்டு சென்றது. அவ் அமைப்பின் மூலவர் எண்ணியக் கோட்பாட்டினை அறிந்தவராகிய கபிலர் ஆவார். எண்ணியம் (சாங்கியம்) தொல்காப்பிய ஐய்ந்திர மரபிலிருந்து சமஸ்கிருதத்தின் பரவல் கிளைத்தது. வேத வேள்வி எதிர்ப்பும், அணுவியலும், கடவுள் மறுப்பும், எண்ணியத்தின் கூடுதல் அடிப்படை. இவ் எண்ணியம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆசீவகத்தோடு இணைந்தது. ஆசீவகத்தில் இணந்தவர்கள் எண்ணியல் கோட்பாடு கொண்டு அதாவது அயிந்திறத்தின் துணை கொண்டு சமஸ்கிருதத்தை முற்றிலும் தேர்ந்ததால்  தமிழகத்தின் சித்தர்களுக்கு இணையானவர்களாக கருதப் படுவார்கள்.

மேலும் பானம்பாரனார், தொல் காப்பியரை 'முந்துநூல் கண்டு முறைப் பட எண்ணிப் புலம் தொகுத்தவராகப்' புகழ்கின்றார். இங்கு சொல்லப்படும் 'முந்துநூல்' என்பதில் தொல்காப்பியரின் இலக்கணப் புலமையும் அடங்கிவிடும். அதனால் அய்ந்திரம் என்பதை நாம் இலக்கண நூலாகக் கருதவேண்டியது இல்லை. "நான்மறை முற்றிய அதங் கோட்டாசான்" என்ற தொடர்கூட ஆய்வுக்குரியதாகிறது. இங்கு தமிழ்ச் சங்கத்தில் தலைமைப் பொறுப்பிலிருக்கும் நான்மறையில் தெளிந்தவர் அதங்கோட்டாசான் என்றால் முதன் முதலில் நான்மறை தமிழில்தான் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. இந்நான்மறை என்பது நச்சினார்க்கினியர் குறிப்பிடும் தைத்திரியம், பெளடிகம், தலவகாரம், சாமவேதம் என்பதாகும்.

பனம்பாரனாரின் பாயிரம், அரிய கருத்துப் புதையலின் திறவுகோலாகும். அறத்தைப் பரப்பும் இயல்பும், வேதப் புலமையில் தேர்ச்சியும் உடைய அதங் கோட்டாசானுக்குத் தொல்காப்பியர், "மயக்கம்தராத மரபினை உடைய தமிழ் எழுத்துமுறையினைக் காட்டினார்" எனக் குறிப்பது மிகுந்த கவனத்துடன் ஆராயத் தக்கதாகும். வேதத்தில் வல்ல அதங்கோட்டாசானுக்குத் தொல்காப்பியர் தமிழ் எழுத்துமுறையைக் காட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது? ஏனெனில் தமிழை ஒரு புதிய தளத்திற்கு (சமஸ்கிருத மாற்றத்திற்கு) எடுத்துச் செல்வதால் அதைப் பற்றிய விளக்கம் தேவைப் பட்டிருக்கலாம்.

கம்பரும் தனது ராமாயணத்தில் அனுமனைப் பற்றிக் கூறும்போது இது பற்றி கூறுகிறார்.

"இயைந்தன இயைந்தன இனைய கூறலும்
மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார்
அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால்
நயந்தெரி காவலர் இருவர் நண்ணினர்"

என்று கம்பன் கூறுவான். (யுத்த காண்டம், வீடணன் அடைக்கலப் படலம், 42). இங்கே அயிந்திரம் நிறைந்தவன் என்று அனுமனைக் கூறுவதால் பேசத் தெரிந்தவன் என்ற பொருளே எல்லாத் தமிழறிஞராலும் உணரப் படுகிறது. "எப்படிச் சொன்னால் குரங்கின வீரர்கள் கேட்பார்கள்" என்று தெரிந்த அனுமன் தன் அதிகாரிகளான மயிந்தனையும் துமிந்தனையும் அனுப்பி, வீடணனை விடுவித்து, இராமனிடம் சேர்ப்பிக்கிறான். இங்கு "அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால்" என்று சொல்வது, "பேசும் மொழி இலக்கணத்தை" நன்கு அறிந்ததால் ஏவலிடும் முறை அறிந்து ஏவினான் என்பதாகத்தானே எடுத்துக் கொள்ள முடியும்.  அக்காலத்தில் அனுமன் சமஸ்கிருதத்தில் வித்தியாசமாக சொல்லியிருக்கலாம்.

கம்பன் ஐந்திறம் என்கிறார். வால்மீகியோ அதையே நுண்ம வியாகரனம் என்கிறார் அதாவது நுண்மையான இலக்கணம் என்கிறார். அவர்காலத்தில் அது புதிதாக நுட்பமாக இருந்திருக்கலாம். கம்பர், வில்லிபுத்தூரார் ஆகியோர்  ஐந்திறம் அறிந்திருக்க வேண்டும் . அதனால்தான் அவர்களால் அவ்வளவு பெரிய காவியங்களை தமிழில் மறுபடியும் மீட்டெடுத்து படைக்க முடிந்தது.

ஐந்திறம் அறிந்தவர்கள் என்று வரலாறு குறிப்பிடுவதில் தொல்காப்பியர், திருவள்ளுவர் ஆகியோரும் அடங்குவர் . அதனால்தான் இருவரும் ஐந்திறம் பற்றி குறிப்பிடுகின்றனர். சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் ஐந்திறம் அறிந்திருப்பதாக இளங்கோவடிகள் குறிப்பால் உணர்த்துகிறார். காடு காண் காதையில் கவுந்தி கூற்றாகக் கீழ்க் கண்ட உரையாடலை இளங்கோவடிகள் பதிவு செய்துள்ளார்

"திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்,
பெருமால் கெடுக்கும் பிலமுண்டு; ஆங்கு
விண்ணோ ரேத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியொ
டிட்ட சித்தி யெனும்பெயர் போகி
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்றுள; ஆங்குப்
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்;
நலம்புரி கொள்கை நான்மறை யாள
பிலம்புக வேண்டும் பெற்றிஈங் கில்லை
கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்
வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்
கியாவது முண்டோ எய்தா அரும்பொருள்"

"அழகர்மலைக்கு செல்வீராயின் அங்குள்ள புண்ணிய சரவணபொய்கையில் இறங்கினால் விண்ணவர் கோமான் விழுநூல் என்னும் ஐயிந்திறம் கிடைக்கப் பெறுவர்" என்பதற்கு கவுந்தி அடிகள், "நான்மறையாளர் பிலத்தினுள் (குழி அல்லது குகை/பிளவு), ஐந்திரத்தை வைத்து மறைத்தாலும் தமிழ் நூலான ஐந்திரத்தை அறிவதற்கு பிலத்தினுள் புக வேண்டியதில்லை, கொல்லாமை நோன்புடன் வாய்மை வழியில் செல்வோருக்கு கிடைக்காத நூலும் உண்டோ" என்கிறார். கவுந்தியடிகள் போன்ற சமணர்கள் வேறு ஏதோ வகையில் ஐயிந்திறம் அறிந்திருந்தனர் என்பது உணர்த்தப்படுகிறது. இளங்கோவடிகள் காலத்தில் வாழ்ந்த சமணர்கள் ஐந்திறத்தை அறிந்திருந்தார்கள் என்பதும் தெளிவு.

சமணர்கள்தான் தமிழில் உள்ள அனைத்து நூற்களையும் ஐயிந்திறம் கொண்டு சமஸ்கிருதத்திற்கு மாற்றியவர்களாக இருப்பார்கள். தமிழ் இலக்கியத்தில் சமணர்களுக்கும், புத்தப் பிக்குகளுக்கும் பெரும் பங்குண்டு என்பதை நினைவு கூற வேண்டும். சமனர்கள் மூலமாக சமஸ்கிருதம் இந்தியா முழுவதும் பரவியிருக்க வேண்டும்.

ஐந்திர நூல் இலக்கண நூற்றொகுப்பு, தமிழ்நாட்டில் முறையாக ஏற்புச் செய்யப்பட வில்லை என்பது விந்தையாகவும் விளங்க முடியாததாகவும்  இருக்கிறது. ஆனால் எப்படியோ வடவர்கள் மத்தியிலும் அறிஞர்கள் மத்தியிலும் பயன்பாட்டிற்கு இருந்தது. அதை உருவாக்கியவர்கள் தமிழராயினும் ஐயிந்திறத்தோடு அவர்களது தொடர்பு  குறுகிய காலத்தில் அறுபட்டுப் போனதை வரலாற்றை உற்று நோக்கினால அறியலாம். அதைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிகை அதிகமாகும் பொழுது ஏதோ ஒரு வகையில் அயிந்திறம் அழிக்கப் பட்டிருக்கிறது அல்லது மறைக்கப் பட்டிருக்கிறது.பின்னர் அது ஒரு எலைட் குரூப்பினாரால் மட்டும் ஆதரிக்கப் பட்டு வளர்ந்தது.

அதனால், சிறிது சிறிதாக அந்நூல் பொதுமக்கள் பயன்பாட்டினின்றும் புலவர் ஏற்பினின்றும் விலக்கப் பட்டு பின்னர் அந்த ஐயிந்திறம் திருமால் குன்றம் எனும் அழகர் மலையில் நான்மறையாளரால் பாறைப் பிளவில் மறைத்து வைக்கப் பட்டது என்று சிலப்பதிகாரத்தால் அறியப்படுகிறது. ஒரு வேளை அது பயன் பாட்டிற்கு வந்த சிலகாலங்களிலே தமிழினத்திற்கு ஏதனும் பேரழிவு ஏற்பட்டிருக்கலாம். அதனால் அதன் சிறப்பும் பயனும் பின்னர் உணரப் படவில்லை போலும்.

அது சரி சமஸ்கிருதம் ஏன் செத்த மொழியாகிவிட்டது? தமிழ்ச் சங்கத்தின் மறைவும், தமிழ்ப் புரவலர்களும், காவலர்களுமாகிய தமிழ் மன்னர்களின் மறைவினாலும், தமிழ்ப் புலவர்களின் ஆர்வமின்மையினாலும், வறுமையினாலும் தமிழ் மொழி வெறும் பேச்சு வழக்கில் மட்டும் உயிர் வாழ்ந்தது அவ்வாறிருக்கும் போது அதை ஒட்டிய சமஸ்கிருதமும் அழிவதில் வியப்பேதுமில்லை. தமிழ்ப் புலவர்களின் பரவலை ஒட்டியும் அவர்களின் பயன்பாட்டினாலும் வளர்ந்த மொழியாகையால் அவர்களின் மறைவுக்கு பின் சமஸ்கிருதமும் மெல்ல மெல்ல வளர்ச்சி இல்லாமல், அந்தணர்களால் தத்து எடுக்கப் பட்டு அவர்கள் மத்தியில் மட்டும் இருக்கிறது.

ஐயிந்திறம் இன்று வரை மர்மமாக இருப்பதாலும் அந்த கோடிங் மிகவும் சிக்கலானதாக இருந்ததாலும் நாளடைவில் கோடிங் வித்தகர்கள் தொடர்ந்து உருவாகாததாலும் சமஸ்கிருதத்தின் வளர்ச்சி நின்றுவிட்டது. உதாரணத்திற்கு இன்று தமிழில் யாப்பிலக்கணம் வழக்கொழிந்ததால் வெண்பா எழுதும் வித்தகர்கள் இல்லாததால் மரபுக் கவிதை மரணித்துக் கொண்டிருப்பது போல் சமஸ்கிருதம் மரணித்து விட்டது.

தமிழ் மொழிக்கான அங்கீகாரம் இந்தியாவில் உரியமுறையில் கிடைத்துள்ளதா என்றால் நிச்சயமாக கிடையாது. தமிழ் மொழிக்கான ஆராய்ச்சியும், நிலவியல் முறையில் முழுமையாக நடைபெறவில்லை. ஏனெனில் தமிழுக்கு எதிரிகள் உலகில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் இருக்கின்றனர். கண்ட நாதாரிகள் எல்லாம் தமிழைப் பழிப்பதை  பல்லிளித்து வேடிக்கை பார்த்துக் கொண்டு சிலை வைத்து மகிழ்கிறான்.

பிறமதத்தவர் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ தமிழுக்கு (இந்துமதத்திற்கு) எதிரியாகத்தான் இருக்கிறார்கள். இந்தியாவை ஆக்ரமித்தவர்கள் இந்துமதத்தை ஒழிக்கும் முயற்சியில், தமிழையும் சேர்த்து அழித்தனர். தமிழின் தொண்மைக்கு எதிரிகள், வடமொழியாளர் அனைவருமே, ஏனெனில் அவரவருக்கு அவரது மொழிதான் முக்கியம். அதிலும் இந்தியாவின் தென் முனையில் இருக்கும் ஒரு சிறு குழுவினரின் மொழி இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக இருப்பதில் பெரும்பாலான இந்தியருக்கு ஏற்புடைமை இல்லை. ஆதலால் தமிழை சிறுமைப் படுத்தும் முயற்சியில்தான் ஈடுபடுவார்கள்.

மத்திய அரசு தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக எந்த துரும்பையும் எடுத்துப் போடவில்லை. ஆனால் துவாரகையின் பழமை பற்றிய ஆராய்ச்சிக்கு பலகோடிகளை செலவழிக்கின்றனர். தமிழ்நாட்டில் பதவிக்கு வரும் அரசுகளும் தமிழ் பற்றிய அக்கறை கொள்வதில்லை. தமிழ்மொழியின் செம்மொழித் தகுதியை ஏற்க மறுக்கும் அன்டை மாநிலங்களும் தமிழைப் பொறுத்தவரை எதிரிகளாகிவிட்டனர். தமிழின் தொண்மைக்கு ஆதாரங்களை அண்டை மாநிலங்களிலிருந்து எதிர்பார்க்க முடியாது. தமிழ்நாட்டுக்கு உள்ளேயே எதிரிகள் திராவிடன் என்ற பெயரில் இருக்கின்றனர். தமிழின் தொண்மைகளை அவர்களை அறியாமலே அழிப்பதில் உறுதியாக இருக்கின்றனர்.ஒரு மொழிக்கு இத்தனை எதிரிகளா?.ஆனால் இத்தனையும் மீறி எத்திசையும் புகழ் மணக்குது எங்கள் சங்கத்தமிழ்.

இந்தியா முழுவதும் பரவலான அதிகாரம் கொண்டிருந்த  மிஷனரிகளின் வழி வந்த கால்டுவெல்லின் மொழி ஆய்வு ஓரளவிற்கு கருத்தில் கொள்ளத் தக்கது. இவரைப் போலவே மிஷனரி சேவைக்கு வந்த வீரமாமுனிவர், போப்பையர், ராபர்ட் டி நொபிலி, சீகன்பால்க் போன்றவர்கள் மொழி ஆய்வு, சொல்லாய்வுகளுக்கு வரவில்லை. மாறாக, அவர்கள் இலக்கியம் படைப்பதிலும், அச்சுப்பணியிலும், முக்கியமாக மொழி பெயர்ப்பிலும் ஈடுபாடு காட்டினார்கள்.

சமஸ்கிருதத்திற்கும் மூலமொழி, தமிழ் மொழிதான் என்ற புதிய கருத்து தமிழ் நாட்டிலுள்ள ஒரு சமூகத்தினரை புரவலர் என்ற நிலையிலிருந்து எதிரிகளாக மாற்றிவிடும். இந்த மாதிரியான சூழ்நிலையில் சமஸ்கிருதத்தை தேவபாஷையாக கருதுபவர்களுக்கு ஐயிந்திறத்தின் மீது தீரா வெறுப்பு ஏற்படும் என்பது இயற்கைதானே. நண்பன் துரோகியானால் அவன்தான் வலிமையான எதிரியாக உருவாகி விடுவான். அதனால்தான் ஐந்திறம் அழிக்கப் பட்டது அல்லது மறைக்கப் பட்டது. ஆனால் சூரியனை எத்தனை கைகள் சேர்ந்தாலும் மறைக்க முடியாது என்பது போல் தமிழின் பெருமையை யாராலும் மறைக்க முடியாது.

நாகரீகத்தின் வளர்ச்சி மற்றும் பரவலை கண்டுபிடிக்க இந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் இன்னும் வேர்ச்சொல், அடிச்சொல் என்று மொழியையும் வார்த்தைகளையும்  பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை. நாகரீகத்தின் வளர்ச்சி மற்றும்  பரவல் பற்றி மொழி ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள் எப்பொழுதுமே தவறாகத்தான் இருந்திருக்கிறது என வரலாறு நிரூபித்து இருக்கிறது. நவீன தொழில் நுட்பமாகிய மரபணு ஆராய்ச்சிகள் ஒவ்வொரு குடும்பத்தை பற்றியும் கூட மிகத்துல்லியமாக எடுத்துரைக்கும் போது இன்னும் வேர்ச்சொல் அடிச்சொல் ஆகியவற்றை கட்டிக் கொண்டு அழுவது ஏன் எனத்தெரியவில்லை.

இந்தோனஷியா, ஜாவா, பாலி, சுமத்ரா ஆகிய தீவுகளில் மகாபாரதம் மற்றும் இராமாயணம் மக்களின் கலாச்சாரத்தோடு இரண்டறக் கலந்துள்ளதைப் பார்க்கும் போது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் தமிழோடும் இதிகாசங்களோடும் அங்கு சென்றதாகத்தான் இருக்கமுடியும். இதிகாசங்களின் மூலமும் தமிழாகத்தான் இருக்கமுடியும்.  காலத்தின் போக்கில் கிடைக்கும் வரலாற்றின் அறுபட்ட சங்கிலித் துண்டுகள்தான் முழுமையான வரலாற்றைத் தரும் அதுவரை அதிகப்பட்சமாக மூளையைப் பயன்படுத்தி வரலாற்றின் அறுபட்ட சங்கிலித் துண்டுகளை உருவாக்குவோம். நன்றி.
தொடர் முற்றியது.


இத் தொடருக்கு கீழ்க்கண்ட தளங்கள் உதவியாக இருந்தது.
தொல்காப்பியம் இருக்குவேதத்திற்கு முந்தையது! - முனைவர் க. நெடுஞ்செழியன்
http://thiruneri.blogspot.in/2010/09/blog-post_54.html
ஹிந்து மதத்தின் புகழ் பற்றி
http://www.hinduwisdom.info/Pacific.htm#Articles:
மாமுனி மயன்
http://en.wikipedia.org/wiki/Mamuni_Mayan
ஐயிந்திறம்
http://en.wikipedia.org/wiki/Aintiram
மயன்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
வேதகாலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம்.
http://www.tamilauthors.com/01/144.html
குமரிக்கண்டம்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

மேலும் படிக்க...!
top