முந்தைய பாகம்
கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது?

அதாவது ஒரு சுயம்வரம் நடத்த அரண்மனையை மேற்ப் பூச்சுகள் பூசி, கழுவி, புதிய அரியணைகள், கட்டில் மெத்தை, மற்றும் சிறப்புப் பொருட்கள் கொண்டு அலங்கரிப் படுகிறது. விருந்தினரை உபசரிக்க விருந்து தடபுடலாக தயாரிக்கப் படுகிறது. சுயம்வரத்தில் தேர்ந்தெடுக்கப் படுகின்ற அந்த நபர் பத்து மாதம் அதே அரண்மனையில் தங்க வேண்டும் என்பது அவசியமானதால் அதற்கும் வசதியாக ஏற்பாடுகள் செய்யப் படுகிறது. இந்த ஏற்பாடுகளுக்குதான் அதிக சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கிறது. 

சுயம்வரத்திற்காக இளவரசியை அழைத்து வந்து சரியான ராஜாவை தேர்ந்தெடுக்க, அரியணையில் அமர்த்தி காத்திருக்க வைத்திருக்கிறார்கள். அரசர்கள் (விந்தணுக்கள்) நான்கு நாள் வரை காத்திருக்க முடியுமாம். ஏற்கனவே அங்கு வந்து காத்திருக்கும் அரசர்களில். சரியான நபர் கிடைக்காத பட்சத்தில் வரப்போகும் சிறந்த அரசனுக்காக இளவரசி ஓரிரு நாள் காத்திருக்கலாம், அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் உயிரை விட்டுவிடுவாள். அதனால் சுயம்வர நிகழ்ச்சி ரத்து செய்யப் படுகிறது. தயாரித்து வைத்த, கெட்டுப் போன உணவு வகைகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை அரண்மனை யிலிருந்து வெளியேற்றி அரண்மனையை மீண்டும் ஒரு சுயம்வர தேதிக்காக மேற்ப் பூச்சு பூசி, கழுவி, தயாரிப்பது போன்றதுதான் மாதவிடாய்.

கர்ப்ப பையில் கருமுட்டை தங்குவதற்காக ஏற்படுத்தப் பட்ட ரத்தம், முட்டை மற்றும் சளி போன்றவற்றை கழுவி சுத்தம் செய்ய 12 நாட்களாகி விடுகிறது. அடுத்த இரண்டு நாட்களில், கர்ப்பபை சுவற்றில் சளி போன்ற மேற்ப்பூச்சு கொடுத்து இரத்த நாளங்களை சரி செய்து வைக்கிறது. அதன் பின்னர், கரு முட்டையை அழைத்து, கர்ப்ப பையில் காத்திருக்க வைக்கிறது. முட்டை அங்கு  சுமார் ஒரிரு நாட்கள் வரைதான் உயிர்ப்புடன் இருக்கும். அதாவது மாதவிடாய் தொடங்கிய ஏழாவது நாளில் இருந்து பதினைந்தாவது நாள் வரைதான் கர்ப்பத்துக்கு உகந்த நாட்கள். அதற்குள் ஒரு குறிப்பிட்ட ஓரிரு நாட்களில் முட்டையுடன் கலக்கும் ஏதோ ஒரு விந்தணுவே கர்ப்பத்தை ஏற்படுத்தும்.

மாதவிடாய் சுழற்சியைப் பொறுத்து, முட்டை கருவுறும் நாள் மாறுபடுவதால் சற்றேக் குறைய அதாவது மாதவிடாய் நாளிலிருந்து ஏழாவது நாளிலிருந்து பதினேழாவது நாள் வரைக்கும் உள்ள “அந்த பத்து நாட்கள்” தான் கலவிக்கும், குழந்தை பெறுவதற்கும் முக்கியமான நாட்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ளது 28 நாட்கள் சுழற்சி உடையவர் களுக்கானது. ஆண்கள் ஒருநாள் விட்டு, மறுநாள் கலவி கொண்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆதலால் 10,12,14,16 ஆகிய நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள்.


                                      


மேலும் இப்பொழுதெல்லாம் பத்து நாட்கள் “முயற்சிக்க”  வேண்டியதில்லை. ஒரு ஐந்து நாட்களாவது முயற்சிக்க வேண்டும் சில பெண்கள் தெர்மா மீட்டர் மூலம் தனக்கு எந்த நாளில் முட்டை தயாராகி உள்ளது என்பதை அறிந்து கொள்வார்கள். முட்டையின் வளர்ச்சி முழுமையடைந்து கருப்பைக்கு வரும் பொழுது பெண்களின் உடல் வெப்ப நிலை சற்று கூடியிருக்கும் அந்த வெப்ப நிலையை நுட்பமாக அறிந்து அன்று கலவி செய்தால் பலன் கிடைக்கும். முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் பெண்களின் உடல் வெப்பம் 0.4°F லிருந்து 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர்  ஒன்றினால் , உங்கள் உடல் வெப்பத்தை அட்டவணைப் படுத்தி,  "அந்த நாளை" கண்டு பிடிக்கலாம். 

முட்டை முழுமை அடையும் போது சுரக்கும் ஒரு வித ஹார்மோனை (ப்ரொஜெஸ்ட்ரோன்) அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் தயார் செய்யப்பட்ட மருத்துவ கிட் கொண்டு செய்யப்படும் பரிசோதனையின் மூலம் அந்த நாளை கண்டுபிடித்து கலவியில் ஈடுபட்டால் பலன் ஏற்படும். 

மாதவிடாய் என்பது ஒரு ஒழுங்கான இடைவெளியில், இருக்க வேண்டும். அது முறையே 27,28,29,30, நாட்கள் என்ற முறையில் தனி நபரை பொறுத்து மாறுபட்டாலும் அவரவருக்கு குறிப்பிட்ட சுழற்சி. மாறாமல் இருக்க வேண்டும். 

கருமுட்டையின் வளர்ச்சிக்கும் சந்திரனின் (நிலவின் வளர்ச்சி) பிறைக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. சந்திரனின் சுழற்சிக் காலமாகிய 28 நாட்கள் என்பது (99 சதவீதம்) பெண்களில் பெரும்பாண்மையினருக்கு ஒத்து வருவதால் அதை வைத்தே கணக்கிடப் படுகிறது. கரு முட்டைக்கும் சந்திரனுக்கும் உள்ள ஒற்றுமையை இவ்வாறு விளக்கலாம். அமாவாசை நாளிலிருந்து சந்திரனைப் போல் கருமுட்டை படிப்படியாக வளர்ந்து பௌர்னமியன்று முழுமை அடைந்து பின்னர் படிப்படியாக தேய்ந்து அமாவசையன்று முட்டை சந்திரனைப் போல் முழுமையாக மறைந்து விடுவதாகக் கொள்ளலாம்.

முன்பெல்லாம் திருமணத்திற்கு, மணப் பெண்ணின் மாதவிடாய் தேதியைக் கேட்டுதான் நாள் குறிப்பார்கள். அது போல் சாந்தி முகூர்த்தத்திற்கும் ஏற்ற நாள் குறிப்பார்கள். ஆனால் இப்பொழுது அதெல்லாம் மூட நம்பிக்கையாக போய்விட்டது. மாதவிடாய் தேதியை ஒருவாரம், பத்து நாட்கள் என்றாலும் தள்ளி வைக்க மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். அங்கு ஆரம்பிக்கும் ஒழுங்கீனமும், பின்னாளில் பாதிப்பை ஏற்படுத்தும் அன்பதை அறியாமல் செய்கிறார்கள்.  

இந்த மாதவிடாய் சுழற்சியின் ஒழுங்கு முறையில் தான் 90 சதவீதம் குழந்தைப் பேறு உள்ளது. ஃபல்லோபியன் ட்யூப்பில் அடைப்பு இல்லாமல், கர்ப்பப் பையில் குறையில்லாமல், முறையான கலவி இருக்கும் பட்சத்தில் குழந்தை பெறுவதில் ஒரு சிக்கலும் இல்லை. முதன் முதலில் உருவாகும் குழந்தைகளை கருவிலே கலைத்தால் அதுவே பின்னர் கருவுறுவதில் சிக்கலை உருவாக்கலாம்.

பெண்மையின் மூலம்தான் இனவிருத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. முதலில் இனவிருத்திக்கான ஏற்பாடு பெண் குழந்தையாக இருக்கும் பொழுது 1:2,000,000 என்று ஆரம்பித்து, பருவம் எய்தும் போது 1:5,00,000 மாறி, பின்னர் மாதவிடாய் காலத்தில் 1:500 என்றாகி முடிவில் இயற்கையாக 1:60 என்ற நிலைக்கு வந்து விட்டது. ஆனாலும் மனிதன் செயற்கையாக அதை நாம் இருவர் நமக்கிருவர் (1:1) என்ற நிலைக்கு தக்கவைத்துக் கொண்டான்.

முப்பது வயதில் திருமணமாகிவிட்டால்  நான்கு ஆண்டுகளில் 91% பேருக்கு குழந்தை பிறந்து விடுகிறது..

முப்பத்தைந்து  வயதில் திருமணமானால் நான்கு ஆண்டுகளில் 84% தான்  பேருக்கு குழந்தை பிறக்கிறது.

நாற்பது வயதில் திருமணமானால் நான்கு ஆண்டுகளில் 64% பேருக்கு  தான் குழந்தை பிறக்கிறது..

ஆகவே பெண்கள் தங்களது முதல் குழந்தையை 32 வயதிற்குள் பெற்று விட வேண்டும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று நாட்களை கடத்தினால் நாட்கள் மட்டுமல்ல வருடங்கள் கூட நொடியில் கரைந்து விடும்.

திருமணமாகி இரண்டு வருடம் வரை குழந்தைக்காக காத்திருக்கலாம். அதற்கு மேல் அதை வாழ்க்கையின் பிரதானமான விஷயமாக எடுத்துக் கொண்டு முயற்சிக்க வேண்டும். ஆண்களின் பிரயத்தனம் என்ன மாதிரி என்பதைப் பார்ப்போம்.



மேலும் படிக்க...!
top